ஞானசேகரன் வழக்கில் பச்சை பொய் கூறும் முதல்வர் : நடிகர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தமிழக காவல் துறையே காரணம் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வழக்கில் குற்றவாளியாக தி.மு.க. நிர்வாகி ஞானசேகரன் பெயரிடப்பட்டிருப்பதை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. ஆனால் இவ்வழக்கின் நிஜத்தை மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்தது மக்கள் மறக்கவில்லை,” எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது :
“துன்புறுத்தப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தேன். பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளால் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அப்போது முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே உள்ள காவல் துறை, இந்த வழக்கை அலட்சியமாக கையாண்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ₹25 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. அந்த தொகையை தவறு செய்த காவலர்களிடமிருந்து வசூலிக்க நீதிமன்றம் கூறியது.”

விசாரணை வேகப்படுத்த டிசம்பர் 28-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், ஜனவரி 5-ம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 24-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வளவும் சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணித்ததால்தான் சற்று விரைவில் தீர்ப்பு வந்துள்ளது.

“ஆனால் இவை அனைத்தையும் மறைத்து, காவல் துறைதான் நீதிக்குப் பாதை வகுத்தது என தி.மு.க. தலைவர் கூறுவது மனசாட்சியற்ற பச்சைப் பொய். உண்மையில், இது தி.மு.க. ஆட்சி சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாத நிர்வாகத் தோல்வியின் ஓர் அடையாளம்,” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இந்த வழக்கில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மகளிர் பாதுகாப்பு மட்டுமே வளர்ந்த நாட்டின் வளர்ச்சி அளவுகோலாக இருக்க வேண்டும்,” என நடிகர் விஜய் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version