ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் தேரோட்டம்- 60 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில் திருஞானசம்பந்தர் துணைவியாருடன் சிவ ஜோதியில் ஐக்கியமான தலமாக திகழ்கிறது. இதனால் இக்கோவில் சுவாமியை வழிபடுபவருக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் தோத்திர பூர்ணாம்பிகை உடனாகிய திருஞானசம்பந்தர் திருக்கல்யாண திருவிழா கடந்த 21ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள ஓதுவார்கள் தேவார பதிகம் பாட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளானோர் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு விதிகளையும் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
