திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மரவபட்டியைச் சேர்ந்த ஜான் பீட்டர் (36) என்பவரிடம், சொத்து விவகாரத்தைக் காரணம் காட்டி 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த கல்லூரி நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஜான் பீட்டர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. பயின்றபோது, தேனி மாவட்டம் தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த அலெக்ஸ் ஆனந்தராஜ் என்பவருடன் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். படிப்பு முடிந்த பின்னரும் தங்களது நட்பைத் தொடர்ந்து வந்த நிலையில், இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அலெக்ஸ் ஆனந்தராஜ் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் பீட்டரைத் தொடர்பு கொண்ட அலெக்ஸ் ஆனந்தராஜ், தானும் தனது அண்ணனும் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வருவதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். மேலும், தனது தந்தை வழியில் உள்ள பூர்வீகச் சொத்துக்களைப் பிரித்து வாங்குவதற்குப் பெரும் தொகை தேவைப்படுவதாகவும், உடனடியாகப் பணம் கொடுத்து உதவினால் சொத்து கைக்கு வந்தவுடன் திருப்பித் தந்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். தனது உயிர் நண்பன் கஷ்டப்படுகிறானே என்று எண்ணிய ஜான் பீட்டர், தன்னிடம் பணம் இல்லாத நிலையிலும், பல்வேறு வங்கிகளில் கடன் (Loan) பெற்று சுமார் 19 லட்சம் ரூபாயைப் பல தவணைகளாக அலெக்ஸ் ஆனந்தராஜிடம் வழங்கியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட அலெக்ஸ் ஆனந்தராஜ், நீண்ட நாட்களாகியும் கூறியபடி பணத்தைத் திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஜான் பீட்டர், தனது பணத்தைத் திரும்பக் கேட்டுத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அலெக்ஸ் ஆனந்தராஜ், “இனிமேல் போன் செய்து தொந்தரவு செய்தால் உன்னைக் கொலை செய்துவிடுவோம்” என ஜான் பீட்டருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டுத் தனது அலைபேசியை அணைத்துள்ளார். நண்பனே தன்னை ஏமாற்றியதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த ஜான் பீட்டர், இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன், மோசடியில் ஈடுபட்ட அலெக்ஸ் ஆனந்தராஜ், அவரது மனைவி, தாயார் சந்திரா மற்றும் நண்பர் நாகராஜ் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

















