கள்ளக்காதலுக்கு இடையூறான கணவனை ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொன்று நாடகமாடிய மனைவி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பு என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர். நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (35) என்பவரது மனைவி சவுமியா (30). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், சவுமியா பணிபுரியும் தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திலீப் (28) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது முறையற்ற உறவைக் கணவர் ரமேஷ் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்டச் சவுமியா திட்டமிட்டுள்ளார்.

சவுமியாவின் கணவர் ரமேஷ் தனது பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீடு (Life Insurance) செய்திருந்தது கள்ளக்காதலர்களுக்குத் தெரியவந்துள்ளது. கணவனைக் கொன்றுவிட்டால் கள்ளக்காதலுக்கு இருந்த தடையைச் சரிசெய்வதோடு, காப்பீடு தொகையையும் பெற்று ஜாலியாக வாழலாம் எனச் சவுமியா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்காகத் திலீப்பின் தம்பி அபிஷேக் மூலமாக ஜிதேந்திரா என்ற ரவுடி கும்பல் தலைவனுக்கு ரூ.35 ஆயிரம் பேசி கூலிப்படையாக அமர்த்தியுள்ளனர். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் ரமேஷை விபத்தில் கொல்ல முயன்று அவர் உயிர் தப்பிய நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி சவுமியா தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று இரவு கணவர் ரமேஷுக்குத் தூக்க மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது, கள்ளக்காதலன் திலீப் மற்றும் ரவுடி கும்பலை வீட்டுக்கு வரவழைத்து, துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து, ரமேஷின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்து சவுமியா நாடகமாடினார்.

கொலை செய்யப்பட்ட ரமேஷின் தம்பி கோதாரி வெளிநாட்டில் இருந்ததால், இறுதிச் சடங்கின் புகைப்படங்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் புகைப்படங்களைத் தீவிரமாகப் பார்த்தபோது ரமேஷின் கழுத்தில் கயிறு போன்ற தடம் மற்றும் காயங்கள் இருப்பதை அவர் கவனித்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மனைவி மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தார். போலீசார் சவுமியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காப்பீடு பணத்திற்காகவும் கள்ளக்காதலுக்காகவும் கணவனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் முன்னிலையில் ரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடைய சவுமியா, கள்ளக்காதலன் திலீப், அபிஷேக் மற்றும் ரவுடி கும்பலைச் சேர்ந்த ஜிதேந்தர், ஸ்ரீராம், ராகேஷ் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூ.2 கோடி பணத்திற்காகக் கணவனைக் கொன்று 3 குழந்தைகளைத் தவிக்கவிட்ட தாயின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version