சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் ‘ட்விஸ்ட்’: நடிகர் ஜெயராம் வீட்டில் அதிரடி விசாரணை – முதன்மைக் குற்றவாளியுடன் தொடர்பா?

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைத் தங்கக் கவசங்கள் மாயமான விவகாரம் தற்போது தென்னிந்தியத் திரையுலகையே அதிர வைத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சபரிமலை கோயில் கருவறை வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலர் சிலைகளின் தங்கக் கவசங்களைச் செப்பனிடுவதற்காகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது 42.8 கிலோ எடையாக இருந்த அந்தக் கவசங்கள், பணிகள் முடிந்து திரும்ப ஒப்படைக்கப்பட்டபோது வெறும் 38 கிலோவாக மட்டுமே இருந்தது. சுமார் நாலரை கிலோ தங்கம் மாயமானது குறித்து எழுந்த பெரும் புகாரைத் தொடர்ந்து, கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது. இந்த வழக்கில் ஏற்கனவே உன்னிகிருஷ்ணன் போத்தி, முராரி பாபு உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்த கேரள சிறப்புப் புலனாய்வு குழுவினர் நேற்று சென்னைக்கு விரைந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மலையாள நடிகர் ஜெயராமின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். தங்கம் திருட்டு வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் நடிகர் ஜெயராம் எத்தனை மதச் சடங்குகளில் பங்கேற்றார் மற்றும் இருவருக்கும் இடையே ஏதேனும் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதா என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, ஜெயராமின் வீட்டில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட செப்புத் தகடுகள் வைத்துச் சடங்குகள் நடத்தப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகளின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

விசாரணையின்போது, சபரிமலை தங்கக் கவசங்கள் காணாமல் போனது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என ஜெயராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மகர விளக்கு பூஜையின்போது அறிமுகமான உன்னிகிருஷ்ணன் போத்தி, பலமுறை சென்னைக்கு வந்து தனது வீட்டில் தங்கியிருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், தனது வீட்டில் வைத்துத் தங்கக் கவசங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு பூஜைக்கு உன்னிகிருஷ்ணன் அழைப்பின் பேரிலேயே தான் சென்றதாகவும், மற்றபடி அவருக்கும் தனக்கும் இடையே எவ்விதமான நிதிப் பரிவர்த்தனைகளும் கிடையாது என்றும் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்திக்கும் சட்டத்திற்கும் இடையிலான இந்தப் போர், நடிகர் ஜெயராமின் பெயரையும் இந்த வழக்கில் இழுத்துவிட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version