தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் விஜய்யைப் பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சென்ற வாகனங்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கின. போலீசாரின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, அதிவேகமாகச் சென்ற பிரசார வாகனத்தைத் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தபோது இந்தச் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தஞ்சை மாநகரில் நடைபெற்ற பரப்புரையின்போது, தலைவர் விஜய்யின் வாகனத்தைக் காணவும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஐந்து இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். இதில் விக்னேஷ் மற்றும் அருண் உள்ளிட்ட ஐந்து பேரும் உடனடியாக மீட்கப்பட்டுத் தஞ்சை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் விக்னேஷ் என்பவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு இளைஞரான அருணுக்குக் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த விக்னேஷின் தந்தை, “காலையில் கல்லூரிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுத்தான் வீட்டிலிருந்து கிளம்பினான். ஆனால், இப்போது விஜய்யைப் பார்க்கச் சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்” எனத் தேம்பி அழுதபடி வேதனைத் தெரிவித்தார்.
பரபரப்பான தேர்தல் பரப்புரைத் தருணங்களில், கட்சித் தலைவர்கள் மற்றும் பிரசார வாகனங்களைப் பின்தொடரும்போது தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். தலைவர்கள் மீதான அபிமானத்தால் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையில் உற்சாகமாகத் தொடங்கிய தவெக-வின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, தொண்டர்கள் விபத்தில் சிக்கிய இந்தச் சம்பவத்தால் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
