மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் santro கார் ஒன்றில் தலையில் ரத்த காயம் மற்றும் கட்டுகளுடன் வந்த இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். காவல் நிலையம் எதிரில் சாலையை குறுக்கே மறித்தபடி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் தொடர்ந்து அவர் தகராறில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாத நிலையில் இரண்டு காவலர்கள் மட்டும் போதை ஆசாமியுடன் இரண்டு மணி நேரம் மல்லுக்கட்டி பார்த்தனர். போதையில் தான் பெரிய ரவுடி என்று காவல்துறையினரிடம் உதார் விட்டு கொண்டு இருந்தார். 108 ஆம்புலன்ஸ் வந்த நிலையில் ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி செல்வதும், அவர் ஆம்புலன்ஸில் இருந்து போதையில் தடுமாறி கீழே இறங்குவதும் என ஒரு மணி நேரமாக வடிவேல் காமெடி மிஞ்சும் வகையில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. இந்நிலையில் போதை ஆசாமி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து மயிலாடுதுறையில் லாரி ஒன்றை இரவில் திருட முயற்சி செய்ததும், போதை அதிகமான நிலையில் லாரி டிரைவர் மற்றும் கிளியனரை தாக்கியதாக மூவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக இரண்டு மணி நேரம் போராடிய காவல்துறையினர் ஆம்புலன்சில் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போதை தெளிந்ததும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Exit mobile version