மதுரை :
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் திடீரென ஒன்றாக முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது :
“சசிகலா இங்கு வருவதற்காக சிறிது தாமதமாக கிளம்பியதால் எங்களோடு பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவர் எப்போதும் எங்களோடு மனதார இருப்பவர்,” என தெரிவித்தார்.
இதையடுத்து, மதுரை புதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறியதாவது:
“அதிமுகவில் சர்ப்ரைஸ் மாதிரி சில விஷயங்கள் நடக்கும். கட்சியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்படும். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லி இருக்கிறேன், அதை பொறுத்திருந்து பாருங்கள் (Wait and See),” என சசிகலா தெரிவித்தார்.
