விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் பிரதானப் பகுதியான மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், சர்ச் சந்திப்பு அருகே ராஜபாளையம் செல்லும் பேருந்துகள் நிற்பதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த நிழற்குடைக்கு அருகே நிறுத்தப்படாமல், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திலேயே பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. நிர்வாகக் குறைபாடு மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால் இந்த நிழற்குடை பயன்பாடின்றி முடங்கியது.
பயன்பாடின்றி இருந்த இந்த நிழற்குடையை, அந்த வழியாகச் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நிழற்குடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் டயர்களை அரிவாளால் வெட்டிச் சேதப்படுத்தினர். ஒரு பொதுத்துறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளே, சட்டத்தை நிலைநாட்ட அரிவாளை ஏந்தி பொதுமக்களின் வாகனங்களைச் சேதப்படுத்திய விதம் அங்குள்ளவர்களைக் கதிகலங்க வைத்தது.
வாகனங்களை அப்புறப்படுத்த எச்சரிக்கை விடுக்காமல், நேரடியாகச் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் இங்கு வாகனங்களை நிறுத்தினால் அவற்றை நிரந்தரமாகப் பறிமுதல் செய்வோம் என அதிகாரத் தோரணையில் எச்சரித்துச் சென்றனர். பேருந்துகள் முறையாக நிழற்குடை அருகே நிற்காததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் எனும் நிலையில், சாமானிய மக்களின் வாகனங்களைச் சேதப்படுத்திய அதிகாரிகளின் இந்தச் செயல் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. முறையான அறிவிப்பு இன்றி பொதுமக்களின் உடைமைகளைச் சிதைப்பது அதிகார வரம்பை மீறிய செயல் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தப் பகுதியில் பெரும் பதற்றமும், மக்களிடையே கடும் கொதிப்பும் நிலவுகிறது.














