திருச்செந்தூர் கோயிலில் ‘தவெக’ அரசியல் பரப்புரை நீதிமன்ற உத்தரவை மீறியதாக இன்ஸ்டா பிரமுகர் மீது அதிரடி போலீஸ் புகார்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில், அரசியல் கோஷங்களை எழுப்பி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அந்தத் தடையையும் மீறி தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் பரப்புரை செய்த நபர் மீது தற்போது காவல்துறை நடவடிக்கை பாயத் தொடங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காண்பித்து, “தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என உரக்கக் கோஷமிடுகிறார். மேலும், “2026-ல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத்துறையை நாங்கள் கையில் எடுப்போம்; அதன்பின் கோயில்களில் இதுபோன்ற வரிசை முறைகள் இருக்காது, அனைவருக்கும் ‘பாஸ்’ (Pass) வழங்கப்படும்” என அரசியல் வாக்குறுதிகளைப் பரப்புரை செய்யும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆன்மீகத் தலத்தில் அரசியல் புகுத்தப்படுவதற்குப் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து திருச்செந்தூர் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தெளிவான உத்தரவுகளை அறிந்தே, திட்டமிட்டு இந்தச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. கோயிலின் புனிதத் தன்மை, ஆன்மீகச் சூழல் மற்றும் பொது அமைதியைக் குலைக்கும் நோக்கோடும், பொதுமக்களிடையே குழப்பத்தையும் சட்ட ஒழுங்குப் பிரச்னையையும் தூண்டும் விதமாகவும் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act 2000) ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை உடனடியாக இணையதளங்களில் இருந்து அகற்றவும், வருங்காலங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நிகழாத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. புனிதத் தலங்களுக்கு வரும் அரசியல் விசுவாசிகள் தங்கள் எல்லைகளை மீறுவது, மற்ற பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பாதிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version