தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயர், படங்கள் புறக்கணிப்பு தஞ்சையில் வெடித்தது புதிய சர்ச்சை!

உலகத் தமிழர்களின் அறிவுக்கருவூலமாகத் திகழும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அதனைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றைத் திட்டமிட்டு மறைக்கும் இந்தச் செயலுக்குக் கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகறியச் செய்யும் உன்னத நோக்கத்துடன், கடந்த 1981-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தஞ்சை மண்ணில் மிகப்பெரிய பரப்பளவில், சோழர் காலக் கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் இந்தப் பல்கலைக்கழகம் உருவாவதற்கு எம்.ஜி.ஆர் காட்டிய தனிப்பட்ட அக்கறை உலகறிந்த ஒன்றாகும்.

தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் தகவல்களை உலகெங்கும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் https://www.tamiluniversity.ac.in/tamil என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் உள்ள ‘வரலாறு’, ‘நோக்கு’, ‘போக்கு’, ‘செயல்’ ஆகிய பகுதிகளில் பல்கலைக்கழகத்தின் தோற்றம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதில், “1981-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது” என்று மட்டும் மொட்டையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் எம்.ஜி.ஆரின் உழைப்பும், கனவும் ஒளிந்திருக்கும் நிலையில், இணையதளத்தின் எந்த ஒரு பக்கத்திலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. மேலும், புகைப்படக் தொகுப்பு (Photo Gallery) பகுதியில் திருவள்ளுவர் படம் மற்றும் கட்டிடப் படங்கள் மட்டுமே உள்ளனவே தவிர, பல்கலைக்கழகத்தை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் ஒரு இடத்தில் கூடப் பதிவேற்றப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்துக் கல்வியாளர்கள் கூறுகையில், “அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு கல்வி நிறுவனம் உருவாவதற்கு வித்திட்ட தலைவர்களைக் கௌரவிப்பது மரபு. ஆனால், தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பது வரலாற்றுப் பிழை. இது போன்ற செயல்கள் வருங்காலத் தலைமுறையினருக்குத் தவறான தகவலைக் கொண்டு சேர்க்கும். எனவே, உடனடியாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு இணையதளத்தைப் புதுப்பித்து, எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை இடம்பெறச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.

இந்தச் சர்ச்சையினால் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது நிர்வாகத்தின் கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version