ரயிலை கவிழ்க்க சதி தீட்டிய மர்மக் குழு : அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்ட விபத்து

சேலம் : சென்னை நோக்கி சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி தீட்டிய அதிர்ச்சி சம்பவம் மகுடஞ்சாவடியில் இடம்பெற்றது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈரோட்டிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், சங்ககிரி வழியாக சேலத்திற்கு சென்று கொண்டிருந்தது. இரவு 9.45 மணியளவில், மகுடஞ்சாவடி அருகே உள்ள காளிகவுண்டம்பாளையம் என்ற இடத்தை நெருங்கியபோது, ரயிலில் இருந்து “தடதட” என சத்தம் கேட்கப்பட்டது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சோதனை செய்தபோது, தண்டவாளத்தில் 10 அடி நீளமுள்ள இரும்புத் துண்டு ஒன்று வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில், அந்த இரும்புத் துண்டின் மீது ஏறிய நிலையில் ரயில் நின்றது.

இது குறித்து ரயில் எஞ்சின் டிரைவர் ரயில்வே மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார். சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கோட்ட ஆணையர் சௌரவ் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதன்பின், ரயில் எஞ்சினின் கீழ் சிக்கியிருந்த இரும்புத் துண்டு அகற்றப்பட்டது.

விபத்து ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையிலிருந்து ரயில் தப்பியதால் பயணிகள் ஆழ்ந்த நிம்மதியடைந்தனர். மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ரயில் தொடர்ந்தது. இந்த காரணமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.

மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் அழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இருப்பினும், இந்த சதியை யார் தீட்டினர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பாதித்த நிலையில், இந்த ரயில் விபத்து சதி முயற்சியும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version