திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்த ஆண்டு உறைபனிப் பொழிவு சற்று தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது அதன் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அவ்வப்போது தலைகாட்டிய உறைபனி, நடப்பு ஜனவரி மாத இறுதியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, நேற்று பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும், இரவு நேரங்களில் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து கடும் குளிர் வாட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலையில் வெப்பநிலை மேலும் சரிந்து 7 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகப் பதிவானது. இந்த அதீதக் குளிரின் காரணமாக, பசுமையான புற்களின் மீது படிந்திருந்த நீர்ப்பனித் துளிகள் உறைந்து, மலைப்பகுதி முழுவதையும் வெண்மையான உறைபனிப் போர்வைக்குள் கொண்டு வந்தன.
கொடைக்கானலின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியான ஜிம்கானா புல்வெளி, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, பியர் சோலா சாலை மற்றும் ஆற்றுக் கரையோரப் பகுதிகளில் இந்த உறைபனியின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டது. இந்தப் பகுதிகளில் உள்ள பசுமை போர்த்திய புல்வெளிகள் அனைத்தும் வெள்ளை நிறக் கம்பளம் விரித்தது போன்ற கண்கவர் தோற்றத்தை அளித்தன. குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மேற்பரப்பு, செடி, கொடிகள் மற்றும் மரங்களின் இலைகள் என எங்கும் உறைபனிப் படலமே ஆக்கிரமித்திருந்தது. சூரிய உதயத்திற்குப் பிறகு, புற்கள் மற்றும் வாகனங்களின் மீது படிந்திருந்த பனித்துளிகள் மெல்ல மெல்ல ஆவியாகிச் சென்ற காட்சிகள் காண்போரைக் கவர்ந்தன. குறிப்பாக, புகழ்பெற்ற நட்சத்திர ஏரியின் மேல் படிந்திருந்த பனி, சூரிய ஒளி பட்டவுடன் புகையாய் ஆவியாகி மேலே எழும்பிய காட்சி சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது.
உறைபனியின் காரணமாக நிலவி வரும் கடும் குளிரினால் கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது உறைந்து போயுள்ளது. அதிகாலை வேளைகளில் நிலவும் இந்த அதீதக் குளிரைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்ந்து வருவதைக் காண முடிகிறது. கடும் குளிரைச் சமாளிக்க மக்கள் அனைவரும் ஸ்வெட்டர், ஜர்க்கீன் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்தவாறே நடமாடி வருகின்றனர். பகலில் இதமான வெயிலும், அதிகாலையில் உறைய வைக்கும் குளிரும் கலந்த இந்த விசித்திரமான காலநிலை மாற்றத்தை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.














