சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில், அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை மூலம் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படுவதே இத்தகைய தொடர் விபத்துகளுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் வழியாக கருங்குளம் நோக்கி அரசு டவுன் பஸ் (எண்: TN 74 N 1386) சென்று கொண்டிருந்தது. இது அந்த வழித்தடத்திற்கான அன்றைய தினத்தின் கடைசிச் சேவை என்பதால், கருங்குளத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் திருப்புவனம் பணிமனைக்குத் திரும்பும் நோக்கில் பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பேருந்தில் மூன்று பயணிகள், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் என மொத்தம் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். பேருந்தை மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.
தேளி கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையை விட்டு இடதுபுறம் இறங்கியது. உடனடியாக ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை மீண்டும் சாலைக்குக் கொண்டு வர முயன்றபோது, வேகம் மற்றும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகப் பேருந்தின் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் மூவரும் லேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான பேருந்து மிகவும் பழையது என்பதும், அதன் டயர்கள் மற்றும் பிரேக் கட்டைகள் தேய்மானத்துடன் இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்புவனம் கிளைப் பணிமனையில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசல்களாக இயக்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகப் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனியாவது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தகுதியுள்ள பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
