திருப்புவனம் அருகே வடமாநிலத் தொழிலாளர்களை வாளால் வெட்டிய கும்பல் மணலூரைச் சேர்ந்த இருவர் அதிரடி கைது!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் இயங்கி வரும் தனியார் பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள தற்காலிகக் குடியிருப்புகளில் தங்கியுள்ள இவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் இயற்கை உபாதைக்காகவும் வைகை ஆற்றையொட்டியுள்ள கருவேல மரங்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையைப் பயன்படுத்துவது வழக்கம். அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் தொழிலாளர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், பாதுகாப்புக் கருதி தொழிலாளர்கள் எப்போதும் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுவாகவே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி இரவு 10:00 மணியளவில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுசிந்தா தேஹரி (20), மனுசோரன் (33) உள்ளிட்ட ஆறு பேர் இயற்கை உபாதைக்காக அந்த ஒற்றையடிப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குச் சென்றுள்ளனர். குழுவிலிருந்த நான்கு பேர் ஆற்றிற்குள் இறங்கிய நிலையில், சுசிந்தா தேஹரியும் மனுசோரனும் மட்டும் பாதையில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர், திடீரெனப் பயங்கர ஆயுதங்களுடன் வெளிப்பட்டுத் தொழிலாளர்கள் இருவரையும் வழிமறித்தனர். தப்ப முயன்ற தொழிலாளர்களை அந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, ஆற்றில் இருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் அவர்கள் தற்போது வீடு திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவம் மணலூர் பகுதியில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் இடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இத்தாக்குதலில் தொடர்புடைய மணலூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (20) மற்றும் சிலைமான் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்ற கவுதம் (22) ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இத்தாக்குதலின் பின்னணி என்ன, பணம் பறிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் மாவட்டக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Exit mobile version