பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜை

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜைகளை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தக்ஷ்னுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்ற தலமாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய கோவிலில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு விடிய விடிய சுவாமி, அம்பாளுக்கு நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டது. பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நாட்டிய மாணவிகளின் இசை நடனம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version