மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சகோதரர்கள் இருவரை மணல்மேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:- இச்சம்பவம் தொடர்பாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வீட்டை சேதப்படுத்தி எதிர் தரப்பினர் தீவைப்பு,:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சுமன்( 48) இவர் மீது ஆத்தூர் பாலையா கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் 3ஆம்தேதி இரவு 8 மணி அளவில் சுமன் ஆத்தூர் மெயின்ரோடு பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டியதில் தலை தனியாக துண்டிக்கப்பட்டு சுமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீஸார் சுமனின் உடலையும், துண்டிக்கப்பட்ட தலையையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடலங்குடியைச் சேர்ந்த சுமனின் உறவினரான முரளி என்ற இளைஞர் மணல்மேடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான முரளியின் சகோதரர் தர்மாவை பிடித்து மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சுமன் தரப்பினர் கடலங்குடியில் உள்ள முரளியின் வீட்டை சேதப்படுத்தி வைக்கோல் போருக்கு தீவைத்தனர். ஆத்தூரில் உள்ள முரளியின் மற்றொரு வீட்டையும் சேதப்படுத்தினர். தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சுமனுக்கும் முரளிக்கும் ஆத்தூரில் உள்ள இடம் தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் முரளி அனுபவத்தில் உள்ள இடத்தில் மதியம் சுமன் கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு டேபிள் சேர் கொண்டு வந்து போட்டு அமர்ந்ததில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன் இடத்தை ஆக்ரமித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டி சுமன் கொலை மிரட்டல் விடுத்ததால், சுமனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய முரளி மற்றும் அவரது சகோதரர் தர்மா ஆகிய இருவரும் இரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த சுமனை வழிமறித்து அருவாளால் சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் இன்று முரளி மற்றும் தர்மாவை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கொலை வழக்கில் சிறையில் அடைத்தனர். சுமனின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Exit mobile version