“மதங்களைக் கடந்த மனிதநேய சங்கமம்”: அடியக்கமங்கலம் குடமுழுக்கிற்கு இஸ்லாமியர்கள் சீர்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் சமூக நல்லிணக்கத்திற்குச் சான்றாக அமைந்த விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி ஆலய மகா குடமுழுக்கு விழா, ஊரே வியக்கும் வண்ணம் பக்தி மற்றும் மனிதநேயப் பகிர்வுடன் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆலயத்தின் நற்பணிகள் முடிவடைந்து, குடமுழுக்கு வைபவங்கள் கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் மிகத் தகுந்த முறையில் தொடங்கின. அன்று முதல் கால யாக பூஜை நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் ஆகம விதிகளின்படி விமரிசையாக நடத்தப்பட்டன. இன்று அதிகாலை நான்காம் கால யாக பூஜை நிறைவுற்று, மகா பூர்ணாஹுதி நடைபெற்ற தருணத்தில், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் முன்மாதிரியான ஒரு நெகிழ்ச்சிச் சம்பவம் அடியக்கமங்கலத்தில் அரங்கேறியது.

புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரத்திற்குப் புறப்படும் முன்பாக, அடியக்கமங்கலம் ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் இருந்து மேள தாளங்கள் முழங்க பிரம்மாண்டமான சீர்வரிசை ஊர்வலம் புறப்பட்டது. ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் ஒன்றிணைந்து, தங்களது சகோதர மதத்தைச் சேர்ந்தவர்களின் ஆலய விழாவிற்காகப் பட்டு வஸ்திரங்கள், மலர் மாலைகள், நெய், பழங்கள் மற்றும் பூஜைக்கான மங்கலப் பொருட்களைத் தாம்பூலத் தட்டுகளில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். ஆலய வாசலில் வந்து நின்ற இஸ்லாமியச் சகோதரர்களை, விஸ்வநாத சுவாமி ஆலய நிர்வாகத்தினர் பன்னீர் தெளித்து, பொன்னாடை போர்த்தி மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர். ஜமாத் அமைப்பினர் கொண்டு வந்த சீர்வரிசைப் பொருட்களை ஆலய நிர்வாகத்திடம் மனதார ஒப்படைத்த நிகழ்வு, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் கண்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சீர்வரிசை வருகைக்குப் பின், முறைப்படி கடப் புறப்பாடு நடைபெற்று, யாகசாலையில் இருந்து புனிதக் குடங்கள் ஆலயத்தைச் சுற்றி வலம் வரப்பட்டன. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் விசாலாட்சி – விஸ்வநாத சுவாமி சன்னதி கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்குச் சிறப்பாக நடைபெற்றது. அடியக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ஆன்மீகச் சங்கமத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு நிகழ்வு முழுமையாக நிறைவடையும் வரை அடியக்கமங்கலம் ஜமாத் அமைப்பினர் அங்கு மாரியாதையுடன் காத்திருந்து, விழா இனிதே முடிந்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும், ஊர் மக்கள் என்ற உணர்வோடு இஸ்லாமியர்கள் காட்டிய இந்த அன்பு, அடியக்கமங்கலம் குடமுழுக்கு விழாவைச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக மாற்றியுள்ளது.

Exit mobile version