சுற்றுலாத் தலமான கொடைக்கானலின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த பொதுக் குப்பைத்தொட்டி திடீரென அகற்றப்பட்டு, அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராம நிர்வாக அலுவலகம் செல்லும் மிக முக்கியமான இந்தப் பாதையில் இருந்த தொட்டியை அகற்றிவிட்டு, அங்கு விதிமீறலாகக் கடை ஒன்று முளைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் குப்பைகளைக் கொட்ட இடமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சாலைகளிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாலையோரங்களில் வீசப்படும் குப்பைகளை மாடுகள், ஆடுகள் மற்றும் தெருநாய்கள் கிளறி விடுவதால், அண்ணா சாலை முழுவதும் கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக, அருகில் உள்ள மருத்துவமனைக் கழிவுகளும் சில நேரங்களில் இந்தப் பொது இடத்தில் வீசப்படுவதால், அந்த வழியாகச் செல்லும் மக்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். “முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ஒரு பிரதானச் சாலையில், பல தசாப்தங்களாக இருந்த பொதுத் தொட்டியை அகற்றி ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது” எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இதேபோல ஹோட்டல் தமிழ்நாடு செல்லும் சாலை மற்றும் எம்.எம். தெரு போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் குப்பைத்தொட்டிகள் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் தரை வாடகை செலுத்துவதாகக் கூறினாலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பொது இடங்களை இவ்வாறு தனிநபர்களுக்குத் தாரை வார்ப்பது சட்டவிரோதமானது எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நகராட்சி ஆணையர் சங்கர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட கடைகளுக்குத் தரை வாடகை வசூலிக்கப்படுவது உண்மைதான். இருப்பினும், பொதுமக்களுக்கு இடையூறு இருப்பின் நகரமைப்புத் துறை மூலம் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்படும்” என உறுதியளித்தார். நகராட்சியின் உடனடித் தலையீடு மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அங்கு குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

















