நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததால், 4 வயது சிறுவன் ஒருவன் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாகப் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகப் பிரம்மாண்டமான குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை தோண்டப்பட்ட ஒரு குழியில், நிலத்தடி நீரூற்று காரணமாகத் தண்ணீர் அதிகளவில் நிரம்பியுள்ளது. ஆரம்பத்தில், அந்த அபாயகரமான குழியைச் சுற்றி எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படாமல், பெயரளவிற்குச் சில கம்புகளை நட்டுத் துணிகளால் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை அந்தத் தற்காலிக எச்சரிக்கைக் கம்புகளும் துணிகளும் அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் – ரதிபிரியா தம்பதியினரின் 4 வயது மகன் ரோகித், மாலை நேரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பாதுகாப்பு வேலிகள் ஏதுமின்றித் திறந்த நிலையில் தண்ணீர் நிரம்பிக் கிடந்த பாதாள சாக்கடை குழிக்குள் சிறுவன் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்தான். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். இறுதியில், தண்ணீர் நிரம்பிய குழிக்குள் ரோகித் சடலமாக மிதப்பதைக் கண்டு அவர்கள் கதறித் துடித்தது காண்போரை நெஞ்சடைக்க வைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் குழிகளைத் தோண்டும்போது மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கூட மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை எனப் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். “குழியைச் சுற்றி இரும்புத் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும் அல்லது பணிகளை விரைந்து முடித்திருக்க வேண்டும்; அதிகாரிகளின் இந்த அலட்சியத்திற்கு ஒரு பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது” என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

















