பழநி அருகே 15-ஆம் நூற்றாண்டு ‘வாமனக்கல்’ கண்டெடுப்பு  திருமாலின் ஐந்தாவது அவதாரச் சின்னங்களுடன் அபூர்வ வரலாற்றுத் தடயம்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில், சுமார் 600 ஆண்டுகள் பழமையான கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘வாமனக்கல்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கள ஆய்வு மேற்கொண்டு இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை உறுதிப்படுத்தினார். பழங்காலத்தில் ‘அமரப்புயங்கசதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தக் கல், தமிழர்களின் நில அளவை முறை மற்றும் வைணவ சமய மரபுகளுக்குச் சான்றாகத் திகழ்கிறது.

கண்டெடுக்கப்பட்ட வாமனக்கல் 30 சென்டிமீட்டர் அகலமும், 60 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இதில் ஸ்ரீமத்பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள திருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தின் முக்கியச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பனை ஓலையாலான தாழைமடல் குடை, கமண்டலம், மற்றும் ‘துறவுகோல்’ எனப்படும் கனத்த கயிறுடன் கூடிய கைத்தடி ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. புராணத்தின்படி, வாமன அவதாரத்தின் போது குடையைச் சூரியனும், கைத்தடியைச் சந்திரனும், கமண்டலத்தைப் பிரம்மாவும் பரிசளித்ததாகக் கூறப்படும் செய்தியை மெய்ப்பிக்கும் வகையில், இக்கல்லில் சூரியன் மற்றும் சந்திரனின் குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கல் ஒரு நிலக் கொடைக்கான அடையாளமாகும் (திருவாழிகல்). 15-ஆம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் பட்டராக இருந்த ‘மாத்தன்’ என்பவருக்கு ஒரு ‘மா’ அளவுள்ள நிலம் கொடையாக வழங்கப்பட்டதை இது குறிக்கிறது. பண்டைய நில அளவைப்படி ஒரு ‘மா’ என்பது 100 குழிகளுக்குச் சமமான நிலப்பரப்பாகும். வைணவக் கோயில்களுக்கு அளிக்கப்படும் நிலங்கள் ‘திருவிடையாட்டம்’ என்றும், கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படுபவை ‘பிரம்மதேயம்’ என்றும் அழைக்கப்பட்டன. இந்தக் கல்லில் சக்கர முத்திரை இல்லை என்றாலும், மாவலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்ட வாமனரின் சின்னங்கள் அச்சு பிசகாமல் செதுக்கப்பட்டுள்ளன.

திருத்தென்புறக்காடு எனும் திருக்குறுந்தொகையின் ஐந்தாம் பதிகத்தில் ‘மாத்தன்’ என்ற சொல் வேதங்களில் சிறந்த மறையோனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வாமனக் கற்கள் பொதுவாக இறந்து போன வைணவப் பெரியார்களின் நினைவிடங்களிலோ அல்லது கொடை வழங்கப்பட்ட நிலங்களின் எல்லைகளிலோ நடப்படுவது வழக்கம். பழநி பகுதியில் கிடைத்துள்ள இந்தத் தொல்லியல் சான்று, அக்காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய செழிப்பான வைணவ பண்பாட்டையும், நுணுக்கமான நில மேலாண்மை முறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வரலாற்று ஆய்வாளர்கள் இந்தப் பகுதியை மேலும் ஆய்வு செய்தால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version