பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணியின் திட்டமிட்ட நடைபயணத்தை எதிர்த்து, அதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது :
“பா.ம.க. தலைமையகம் சென்னையிலோ வேறு எங்குமோ இல்லை. தற்போதைய தலைமையகம் தைலாபுரத்தில்தான் உள்ளது. பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக சொல்வது சட்டவிரோதமானது. நிர்வாகிகளை தனிச்செயல்பாடாக நியமித்தல் ஏற்க முடியாதது.
அன்புமணி கட்சியின் செயல் தலைவர் என்ற பதவியில் மட்டும் செயல்பட முடியும். கட்சி தலைவராக இருக்கிறேன் நான்தான். சிறப்பு பொதுக்குழுவின்படி அதுவே நடைமுறையில் உள்ளது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள்,” என தெரிவித்தார்.
ஜூலை 25ம் தேதி அன்புமணி தொடங்கவுள்ள நடைபயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகக்கூடும் என அவர் எச்சரித்தார். இதனையடுத்து, டிஜிபியிடம் புகார் மனுவும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், “போலீசார் இதனை கவனத்தில் கொண்டு, இந்த சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.