விழுப்புரம் : “பாட்டாளி மக்கள் கட்சியில் அதிகாரம் எனக்கே! என்னுடன் இருப்பவர்களுக்கே எம்.எல்.ஏ. பதவிக்கான வாய்ப்பு” என அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“இங்கே வந்து இருக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களே வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இவர்களை நேரடியாக நான் தேர்ந்தெடுப்பேன். எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான். ஏனெனில், பா.ம.க.வில் அனைத்துக்கும் எனக்கே அதிகாரம் உள்ளது.”
மேலும்,
“நல்லவர்கள், வல்லவர்கள், திறமை உள்ளவர்கள் சட்டமன்றத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவே நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். எனவே என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பேற்றவர்களே எம்.எல்.ஏ. சீட்டுக்கு பரிசீலிக்கப்படுவர்” என்றார்.
கூட்டணி குறித்து : “சட்டமன்ற தேர்தலில் எத்துடன் கூட்டணி என்பதைப் பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. ஆனால், வெற்றி பெறும், வித்தியாசமான, நன்மை தரும் கூட்டணி அமைக்கப்படும்” என்றும் கூறினார்.
முருக பக்தர் மாநாட்டில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து,
“ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரை இழிவுபடுத்திய விவகாரம் தவறானது. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது” என கருத்து தெரிவித்தார்.