திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த குழந்தைகள் குறித்து நேரில் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டிமண்டல் பகுதியைச் சேர்ந்த பாண்டி லாரன்ஸ் (23) மற்றும் அவரது சகோதரி பாண்டி பத்மா (38) ஆகியோர், அந்த மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடமிருந்து ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் பகுதியில் ஆடு மற்றும் வாத்து மேய்ப்பதற்காக கொண்டு வந்துள்ளனர்.
மேலவாசலில் நான்கு குழந்தைகள் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அவர்களில் சிலர் அழுவதை பார்த்த பொதுமக்கள் சந்தேகத்துடன் அணுகி, விசாரித்துள்ளனர். அப்போது, “எங்களுக்கு பெற்றோர் இல்லை; எங்களை வாத்து மேய்ப்பதற்காக கொண்டு வந்துள்ளனர்” என குழந்தைகள் அழுதபடி பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பொதுமக்கள் மேலவாசல் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், 1098 குழந்தை பாதுகாப்பு ஹெல்ப்லைன் சேவையை அணுகி புகார் அளிக்கப்பட்டது. தகவல் பெற்ற மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாண்டி லாரன்ஸ் மற்றும் பாண்டி பத்மா ஆகிய இருவரும் குழந்தைத் தொழிலாளர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக இளம்பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு சிறார்கள் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை விற்று விலங்குப் பண்ணையில் வேலைக்காக பயன்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.