இந்திய கடற்படையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’ ஜூலை 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், ரஷ்யாவின் கடலோர நகரம் கலினின்கிராட் நகரத்தில் இருந்து இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. இது, இந்தியா-ரஷ்யா இடையிலான இருநாட்டு இராணுவ ஒத்துழைப்பின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதன் முக்கிய சிறப்பம்சங்கள் :
- 3,900 டன் எடை, 125 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்க்கப்பல், இந்தியா மற்றும் ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதில், கடல் மற்றும் நிலத் தளங்களை குறிவைக்கும் நீள தூர ஏவுகணையான பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
- கப்பலின் உதிரிப்பாகங்களில் 26 சதவீதம் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்தக் கப்பலுக்கு, புராணங்களில் கடவுள்களின் தலைவனான இந்திரன், போருக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாளின் பெயரான ‘தமால்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது:
“ஐ.என்.எஸ். தமால், இந்திய கடற்படையின் வளர்ச்சியின் அடையாளமாகவும், இந்தியா-ரஷ்யா இடையிலான உறவின் வலிமையை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இந்திய கடற்படையில் இணைக்கப்படும் எட்டாவது போர்க்கப்பல் இதுவாகும்” என்றார்.