புதுடெல்லி : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற கடத்தல் விவகாரத்தில், கூடுதல் டிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டறிந்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயராமனை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயராமன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று கோடைகால அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஜெயராமன் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர், “இந்த வழக்கில் ஜெயராமன் எதிர்மனுதாரராக கூட இல்லையென்று” வாதிட்டு, “தனது கைது சட்டவிரோதமானது” எனக் குறிப்பிட்டார்.
இந்த வாதத்தினை ஏற்ற நீதிபதி, தமிழக காவல்துறையிடம் நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், “மூத்த அதிகாரியாக 28 ஆண்டுகள் பணியாற்றிய ஜெயராமன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்வதன் காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இதைப் பற்றிய முழுமையான விளக்கத்தை மாநில அரசிடம் கேட்டு, நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்ததோடு, ஜெயராமன் பணியிடை நீக்கம் தொடர்பான உரிய விளக்கத்தை நாளை உச்சநீதிமன்றத்தில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.