கேரள மாநில சுற்றுலாத்துறையின் சார்பில், அந்த மாநிலத்தின் கண்கவர் இயற்கை எழில் மற்றும் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் நோக்கில் ‘லென்ஸ்கேப் கேரளா’ (Lenscape Kerala) என்ற அகில இந்திய புகைப்படக் கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் கோலாகலமாகத் தொடங்கியது. கேரளாவின் பசுமை மாறா காடுகள், உப்பங்கழிகள், பாரம்பரியக் கலைகள் மற்றும் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கத்தக்க வாழ்வியல் அனுபவங்களைச் சித்தரிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 அரிய புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் முன்னணி 10 பயண மற்றும் ஊடகப் புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களில் சிறைபிடித்த இந்தப் படைப்புகள், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்புமிக்க கண்காட்சியைப் பிரபல மலையாளத் திரை நாயகி சீமா மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளரும் விமர்சகருமான சதானந்த் மேனன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தனர். இந்தியாவின் தலைசிறந்த புகைப்படக் கலைஞர்களான எச். சதீஷ், கவுண்டேய சின்ஹா, ஷிவாங் மேத்தா, சைபல் தாஸ், உமேஷ் கோக்னா, சௌரப் சட்டர்ஜி, நடாஷா கர்தார் ஹேம்ரஜனி, ஐஸ்வர்யா ஸ்ரீதர், அமித் பாஸ்ரிச்சா மற்றும் மனோஜ் அரோரா ஆகியோரின் தனித்துவமான படைப்புகள் இக்கண்காட்சியில் அணிவகுக்கின்றன. புகழ்பெற்ற கலை விமர்சகர் உமா நாயரால் தொகுக்கப்பட்ட இந்தத் திட்டம், விருது பெற்ற வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் பாலன் மாதவன் இயக்கத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இக்கண்காட்சி தொடங்கப்பட்டதையொட்டி கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் விடுத்துள்ள செய்தியில், “கேரளம் என்பது அனைத்துப் பருவ நிலைகளிலும் பயணிக்க ஏற்ற ஒரு சொர்க்க பூமியாகும். சுற்றுலாப் பயணிகளுக்குக் கேரளா வழங்கும் ஆழமான மற்றும் உயிர்ப்பான அனுபவங்களைப் படைப்பாற்றல் மிக்க புகைப்படங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கண்காட்சியின் ஒரு பகுதியாக, இளம் புகைப்படக் கலைஞர்களுக்காகப் புகைப்படக் கலை குறித்த சிறப்புக் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களின் உயிர்ப்பும், அவை சொல்லும் கதைகளும் இந்தியாவிலேயே இது போன்றதொரு முயற்சிக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதாகப் பாலன் மாதவன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கண்காட்சி சென்னை வாசிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.














