தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாயமான்குறிச்சி, நெட்டூர் மற்றும் கடங்கநேரி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 9.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணைகளை ஆட்சியர் பார்வையிட்டு, அங்குள்ள செடிகளின் பராமரிப்பு குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து, நெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 2.67 லட்சம் மதிப்பீட்டில் பசுமைத் திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்த அவர், பள்ளி வளாகங்களைப் பசுமையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நெட்டூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ‘குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 5.96 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நவீன பள்ளிக் கழிவறைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளையும் பார்வையிட்ட அவர், கட்டுமானப் பணிகளில் தரத்தை உறுதி செய்யுமாறும், பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருமாறும் அலுவலர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். ‘கலைஞரின் கனவு இல்லம்’ (2025–2026) திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களின் வீடுகளைக் கட்டி வரும் பணிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார்.
ஆய்வின் ஒரு பகுதியாக நெட்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், அங்குள்ள குழந்தைகளின் உடல்நலனில் தனி அக்கறை காட்டினார். குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தைத் தாமே நேரில் பரிசோதித்ததுடன், அவர்களுக்குத் தினசரி வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சத்துக்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். அங்கன்வாடி ஊழியர்களிடம் குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பராமரிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செல்வராஜ், உதவிப் பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஞானபிரகாஷி, சரஸ்வதி, சரண்யா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்தத் தொடர் ஆய்வுகள் ஆலங்குளம் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

















