தமிழக அரசின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கன்வேயர் பெல்ட்கள் மற்றும் நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் இந்த அரசு அனல் மின் நிலையத்தில் மொத்தம் ஐந்து அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு ஒன்று மற்றும் இரண்டாவது அலகுகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் காரணமாக, அங்குப் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் மின் உற்பத்தி முடங்கியுள்ளது. தற்போது மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றைய விபத்து மின் வாரியத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியைச் சுமந்து வரும் கன்வேயர் பெல்ட் பகுதி-2ல் திடீரென தீப்பிடித்தது. ரப்பர் மற்றும் நிலக்கரி துகள்கள் இருந்ததால் தீ மளமளவெனப் பரவி, அதன் அருகிலிருந்த ‘செகண்டரி கிரஷர்’ எனப்படும் நிலக்கரி அரைக்கும் பகுதி-2க்கும் பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பகுதிகளும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. வானை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகையால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டது.
தகவலறிந்ததும் அனல் மின் நிலையத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் நீண்ட தூர கன்வேயர் பெல்ட்கள் மற்றும் விலை உயர்ந்த நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதன் சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

















