திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர இல்லாததால், தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதில் நிர்வாகம் கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக குப்பைகள் நகரத்திற்கு வெளியே உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்று இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
இதே சூழலில், 25-ஆவது வார்டு சிறுபூலுவபட்டி அருகில் உள்ள அம்மன் கல்யாண மண்டபத்துக்குப் பின்னால், இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வந்தது. இங்கு அதிக அளவில் குப்பைகள் சேர்க்கப்பட்டதால் துர்நாற்றம் வீசி, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி அந்தப் பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் 300-க்கும் அதிகமானோர் திடீர் மறியலில் இறங்கினர்.
வடமாநில தொழிலாளர்களின் ‘க்ளீன் கரோ’ கோஷம்
குப்பை அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் “க்ளீன் கரோ… க்ளீன் கரோ” என்று இந்தியில் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திடீரென அதிகமானோர் சாலையில் இறங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
போலீசார் – தொழிலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மறியலை அகற்ற முயன்றனர். ஆனால் தொழிலாளர்கள் கைதுக்காக ஒத்துழைக்காமல் எதிர்ப்புக் கிளம்பியதால், போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
பின்னர், சிலரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் மீதமுள்ள தொழிலாளர்கள் போலீஸ் வாகனத்தை சுற்றிவளைத்து இந்தியில் கோஷமிட்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவர, அந்தப் பகுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரின் குப்பை மேலாண்மை சவால்
திருப்பூர் ஒரு காலத்தில் சிறிய நகரமாக இருந்தாலும், பனியன் தொழில்துறையின் வேகமான வளர்ச்சியால் 2000களுக்குப் பிறகு அசுர வளர்ச்சியை கண்டது. தற்போது நகரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருவதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த வேகமான நகர வளர்ச்சிக்கு ஏற்ப, கழிவு நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உட்கட்டமைப்பு சரியாக மேம்படுத்தப்படாதது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை செயல்முறைப்படுத்த இடமின்றி, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் நிலை சேகரிப்பு மையங்களாக குப்பைகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்புகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.

















