ஸ்ரீவில்லிபுத்தூரில் குமாஸ்தா குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவரது மனைவி தெய்வானை காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார்.
கொளூர்பட்டி தெருவை சேர்ந்த வினோத்(30) தெய்வானையை தவறாக பேசிய புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாரிமுத்துவை புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வினோத் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி இரவு ஶ்ரீவில்லிபுத்தூர் கைகாட்டி கோயில் பஜார் அருகே நடந்து சென்ற மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார், வினோத்தை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் வினோத்துக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.