“கொடுத்த வாக்குறுதிகளை மறப்பதே முதல்வர் ஸ்டாலினின் பழக்கம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
தமிழக பாஜக திட்டமிட்டபடி, மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடுகள் நடைபெற உள்ளன. அதன் தொடக்கமாக இன்று (ஆகஸ்ட் 22) திருநெல்வேலியில் மாநாடு நடைபெற்றது. வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே தச்சநல்லூர் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் பங்கேற்க கேரளத்தின் கொச்சியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டரில் நெல்லை சென்று, அங்கிருந்து காரில் தச்சநல்லூரில் நடந்த மாநாட்டு மேடைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
முதல்வருக்கு பயம்: அண்ணாமலை
மாநாட்டில் பேசிய பாஜ மாநில செயலாளர் அண்ணாமலை,
“2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பொறுப்பு பூத் பொறுப்பாளர்களுக்கு உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜ தொண்டர்கள் மக்களுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். இந்த 8 மாதங்களில் கடுமையாக உழைத்து, தேஜ கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தையே பார்த்து பயப்படுகிறார். எப்போதும் பயந்து கொண்டு இருக்கும் ஸ்டாலினை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டியது நம் கடமை,” என்று கூறினார்.
வாக்குறுதிகளை மறப்பது ஸ்டாலினின் பழக்கம்: நயினார்
தொடர்ந்து பேசிய பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்,
“2021 சட்டசபை தேர்தலில் திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் அவற்றில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. காஸ் மானியம், பெட்ரோல் விலை, கல்விக் கட்டணம், தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம், அரசு பணியிடங்கள், சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை.
முதல்வருக்கு வாக்குறுதி கொடுப்பது வழக்கம். ஆனால் தேர்தல் முடிந்ததும் அதை மறப்பதே அவரது பழக்கம். எத்தனை நாள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. பாஜ ஆட்சி மக்களுக்கான ஆட்சி. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொண்டிருப்பது உண்மையில் ‘டிஸாஸ்டர் மாடல் அரசு’ என்று மக்கள் கூறுகின்றனர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான இந்த போரில் தர்மம் வெற்றி பெற வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டின் இறுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றி, பின்னர் நெல்லையிலிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்பட்டு, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்பினார்.
















