அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி, குழந்தை ராமரின் சிலைக்கு பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோயிலின் பிரசாதம் கிடைக்கவில்லை என பலரும் புகார் அளிக்கத் தொடங்கினர்.
இந்த புகார்கள் உத்தரபிரதேச சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதில், பிரசாதம் வீடு தேடி வந்து தரப்படும் என்ற வார்த்தையை நம்பி 6.3 லட்சம் பேர் ஏமாறியதாகவும், இவர்களிடமிருந்து மொத்தமாக ரூ.3.85 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த மோசடியை காசியாபாத், இந்திராபுரம் பகுதியில் வசித்துவந்த, தற்போது அமெரிக்காவுக்கு குடிபோன ஆஷிஷ் சிங் என்ற நபர் மேற்கொண்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர். khadiorganic.com என்ற போலி இணையதளத்தை உருவாக்கிய அவர், 2023 டிசம்பர் 19 முதல் 2024 ஜனவரி 12 வரை பிரசாதம் அனுப்புவதாக கூறி உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்துள்ளார்.
இந்த பரிசுகளுக்கான கட்டணமாக இந்தியர்கள் ரூ.51 மற்றும் வெளிநாட்டவர்களிடம் 11 டாலர்கள் என்ற கணக்கில் பணம் பெறப்பட்டது. ஆனால் எந்தவொரு பிரசாதமும் அனுப்பப்படவில்லை.
தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீசார் ஆஷிஷ் சிங்கை கைது செய்தனர். அவரிடமிருந்து பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ₹1.70 கோடி பணம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து :
ஒரு மடிக்கணினி, இரண்டு ஐபோன்கள், ₹13,970 ரொக்கம், 16 அமெரிக்க டாலர்கள், இந்திய மற்றும் அமெரிக்க அடையாள அட்டைகள், டெபிட் கார்டுகள்,ஓட்டுநர் உரிமம் (வாஷிங்டன்), சுகாதார அட்டை, உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து, ஆஷிஷ் சிங்கின் மீது IPC 420 (ஏமாற்று நோக்குடன் பணம் பெறுதல்), IT Act 66D (இணையவழி மோசடி), மற்றும் பாஸ்போர்ட் சட்டம் 1967 பிரிவு 12(3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை முடிந்து மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், போலி இணையதளங்கள் பெருகும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.