சர்வதேச யோகா தினத்தையொட்டி மயிலாடுதுறையில் 5 வயது முதல் 80 வயது வரையிலானோர் பல்வேறு ஆசனங்களை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர், 46 ஆண்டுகளாக கட்டணம் இன்றி யோகா கற்றுத்தரும் யோகா ஆசிரியருக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் ஸ்ரீ பதஞ்சலி யோகா மையம் என்ற யோகா பயிற்சி நிலையம் கடந்த 46 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் குரு டி.எஸ்.ஆர்.கணேசன் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் சேவை நோக்கோடு 46 ஆண்டுகளாக இலவசமாக மாணவர்களுக்கு யோகா கற்பித்து வருகிறார். இன்று 9-ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, அதிகாலை தொடங்கி யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் 5 வயது முதல் 80 வயது வரையிலான 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து யோகா மாஸ்டர் கணேசனுக்கு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய யோகா மாஸ்டர் தற்போது நடுத்தர வயதினர் முதல் வயதானவர்கள் வரை மட்டுமே ஆர்வத்துடன் யோகா வகுப்பிற்கு வருவதாகவும் இளைஞர்கள் மனநலன் உடல் நலம் பெற யோகா வகுப்பிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.