புதுடில்லி :
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 276 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில் 4 பேர், டில்லி, தமிழகம், குஜராத்தில் தலா ஒருவராக மொத்தம் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனால், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் முன்னணியில் உள்ளன. பொதுமக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது :
“முதியோர், கர்ப்பிணிகள், மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் செல்லும்போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் அச்சம் அடைய வேண்டாம். மத்திய அரசு வழங்கும் ஆலோசனைகளையே மாநிலமாக நாங்களும் பின்பற்றி வருகிறோம்,” என்றார்.
மக்கள் முன் எச்சரிக்கையாக இருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது என்பதையே அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.