விடுமுறை செல்லும் பயணத்தில் விபத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தியர்கள் அமெரிக்காவில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அதேவேளை, மற்றொரு சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டாவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த கார் சாலை விபத்தில் சிக்கியது. லாரியுடன் மோதி தீப்பிடித்த அந்த காரில், உடல் கருகிய நிலையில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சோகம் டல்லாஸ் அருகே நடைபெற்றதாகவும், இறந்தவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு, ஹைதராபாத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மற்றொரு விபத்தில் மாணவர்கள் பலி
இதேபோல், நியூயார்க்கில் இடம்பெற்ற மற்றொரு சாலை விபத்தில், கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் மானவ் படேல் (வயது 20), சவுரவ் பிரபாகர் (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து நிகழ்ந்த போது, காரில் முன் இருக்கையில் இருந்த மற்றொரு பயணியும் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதிய பிறகு பாலத்தில் மோதியது தெரியவந்துள்ளது.
இந்த இரு சோகமான சம்பவங்களுக்கும் இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.