மயிலாடுதுறை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.53% மாணவர்கள் தேர்ச்சி. தனியார் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நிலையில் 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 985 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 10850 பேர் தேர்ச்சி பெற்றனர். 90.53 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 33வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பிடித்துள்ளது. மயிலாடுதுறை மேகனா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜகசுவேதா, மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் குட் சமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அபிநிலா கபினியா ஆகிய இரண்டு மாணவிகள் என மூன்று மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடமும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். குட் சமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ராகவினா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 தனியார் பள்ளிகள், 9 அரசு பள்ளிகள் 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் குறிப்பாக கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டுப்படுகை குக்கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
