ராணுவ அதிகாரியாக வேண்டும் எனும் உயர்ந்த லட்சியம் : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 2 ம் வகுப்பு மாணவிக்கு வாழ்த்து !

மதுரை :
ராணுவ அதிகாரியாக வேண்டும் எனும் உயர்ந்த இலட்சியத்தை கொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி அழகு யாழினி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சமீபத்தில் எழுதிய கடிதம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது கடிதத்தில், “நான் ஒரு பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் நம் நாட்டிற்கு ஒரு பெண் ஜனாதிபதி இருக்கிறார். என் உண்டியல் சேமிப்பிலிருந்து உங்களுக்காக ஒரு புடவையை வாங்கினேன். மக்களைக் காப்பாற்றவும் பயங்கரவாதிகளை எதிர்க்கவும் ராணுவத்திற்கு உத்தரவிடுங்கள்,” என கூறி, தனது நாட்டுப்பற்றையும் விடாமுயற்சியும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த உணர்ச்சிபூர்வமான கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தை நெகிழ வைத்தது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, யாழினிக்கு வாழ்த்து மற்றும் நன்றி தெரிவிக்கும் பதிலாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “உங்கள் கடிதம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் நாட்டுப்பற்றும் உயர்ந்த இலட்சியமும் சிறந்த விஷயங்களைப் புகட்டுகின்றன. உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க வாழ்த்துகிறேன்,” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பதில் யாழினியின் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பல மடங்காக அதிகரித்துள்ளது. இளம் வயதிலேயே நாட்டுக்காக கனவு காணும் யாழினியின் செயல் சமூகத்திலும் பெருமைப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

Exit mobile version