ரூ. 1.5 கோடி மதிப்பிலான 299 கிலோ போதைப் பொருட்கள் அதிரடி அழிப்பு: திருப்பூர் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் கோவை ஆலைக்குள் புகையானது கஞ்சா!

திருப்பூர் மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில், காவல்துறையினரால் பல்வேறு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் மாநகரக் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் 61 கஞ்சா தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பிலான 299 கிலோ போதைப் பொருட்களை அழிக்கும் பணி இன்று நடைபெற்றது. திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், திருப்பூர் மாநகரக் காவல் ஆணையருமான ராஜேந்திரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சுமார் 181 கிலோ கஞ்சா, 118 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்கள் மற்றும் 2.5 கிராம் மெத்தபெட்டமைன் (Methamphetamine) ஆகிய அரசால் தடை செய்யப்பட்ட மிக வீரியமிக்க போதைப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கோவை மாவட்டம் மதுக்கரை தாலுக்கா, செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட்’ (Coimbatore Bio-Waste Management) நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள நவீன இயந்திரங்கள் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் போதைப் பொருட்கள் அனைத்தும் முழுமையாகத் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்த அழிப்பு நடவடிக்கையின் போது, திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ராஜராஜன் மற்றும் கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டுப் போதைப் பொருட்கள் உறுதி செய்யப்பட்டன. 2026-ஆம் ஆண்டில் போதை இல்லாத திருப்பூரை உருவாக்கும் லட்சியத்தோடு, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை போதைக் கடத்தல் கும்பலிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version