ஈரானில் சிக்கிய 292 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு ; “ஆபரேஷன் சிந்து” தொடரும்

இந்திய அரசின் “ஆபரேஷன் சிந்து” மீட்பு முயற்சியின் முக்கிய கட்டமாக, ஈரானில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை பாதுகாப்பாக டில்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான போர் சூழ்நிலையின் பாதிப்பால், அந்நாடுகளில் வேலைக்காக சென்ற பல இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்தனர். அவர்களை மீட்பதற்காக வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைந்து “ஆபரேஷன் சிந்து” எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் மஷாஹத் பகுதியில் சிக்கியிருந்த 292 பேர் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பலர் விமான நிலையத்தில் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இந்த தகவலை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை மொத்தமாக 2,295 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், வெளியூரில் உள்ள அனைத்து இந்தியர்களும் முழு பாதுகாப்புடன் தாயகம் கொண்டு வரப்படும் வரை அரசின் முயற்சி தொடரும் என கூறப்படுகிறது.

Exit mobile version