இந்தியை எதிர்க்கும் குருட்டு எண்ணம் வேண்டாம் திணிப்பை நான் எப்போதும் ஏற்கமாட்டேன் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு..
வேலைக்கு இந்தி உணர்வுக்கு தாய்மொழி உலகிற்கு ஆங்கிலம்: வெங்கையா நாயுடுவின் மும்மொழிப் பார்வை..
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது (SRM) பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் வாசுதேவராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் 750 இளங்கலை மாணவர்கள் மற்றும் 320 முதுகலை மாணவர்கள் என மொத்தம் 1,070 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது
இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டு எண்ணத்தில் இருக்காதீர்கள் அதே நேரத்தில் இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் அதை நான் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால், நீங்கள் தேசிய அளவில் தலைசிறந்த இடங்களை அடைய விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தைத் தொடர விரும்பினால் இந்தியையும் கற்றுக் கொள்வது அவசியம். அதேபோல் ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழி என்றாலும், அது ஒரு சர்வதேச இணைப்பு மொழி என்பதால் அதையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் முதலில் தாய்மொழியில் பேச வேண்டும், அதன் பிறகு மற்ற மொழிகளைக் கற்க வேண்டும் வீட்டில் உங்கள் தாத்தா பாட்டியுடனும், அண்டை வீட்டாருடனும் வழிபாட்டுத் தலங்களிலும் தாய்மொழியில் பேசுவதைப் பெருமையாகக் கருதுங்கள். அதுவே மொழியைப் பாதுகாக்கும் வழியாகும். கலாச்சாரம் இல்லாத கல்வி முற்றிலும் பயனற்றது. கலாச்சாரம் என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல, அது நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய வாழ்க்கை முறை என்று குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர் கல்வி கற்று வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டுவதில் தவறில்லை. ஆனால் மீண்டும் உங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து சேவை செய்ய வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களுக்கு வாழ்வு அளித்த சமூகத்திற்கு மீண்டும் எதையாவது திருப்பித் தாருங்கள். உங்களைப் பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் கல்வி கற்பித்த ஆசிரியர்களை இறுதிவரை மதிக்க வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், உலகம் வேகமாக மாறி வருவதால் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
