நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் MLAதலைமையில்250குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவபொங்கல் விழா

நன்னிலம், ஜன.8- நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் 250 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ சிலம்பம் சுற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சரான இரா.காமராஜ் எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பசு மாடுகளுக்கு கோ பூஜை செய்து, குத்து விளக்கு ஏற்றி, செங்கல் அடுப்பில் மண்பானை வைத்து, பொங்கல் பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து ஆகியவை கட்டப்பட்டு பானைகளுக்கு திலகமிட்டு அடுப்பில் வைத்து தீ மூட்டினர். அதன் பின்பு பானையில் பால் ஊற்றி பொங்கல் பொங்கிய பின்பு வெள்ளம், ஏலக்காய், முந்திரி, திராட்சைகள் போட்டு அகப்பையால் கிண்டி பொங்கலிட்டனர். இதில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் இருபுறங்களிலும் கரும்பு, தோரணம் கட்டப்பட்டு பொங்கல் இட்டனர். அதனை தொடர்ந்து விவசாயத்திற்கும், உயிர்களுக்கும் ஆதாரமான சூரிய பகவானுக்கு சூடம் ஏற்றி நன்றி தெரிவிக்கும் ஒரு சூரிய வழிபாடு செய்தனர். முன்னதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.காமராஜ் எம்எல்ஏ மாணவ, மாணவிகளோடு சிலம்பம் சுற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது, பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். தமிழர்களின் வீரத்தையும், நன்றி உணர்ச்சியையும் காட்டுகின்ற கலாச்சார விழா. இந்த விழா தமிழகத்தில் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவான விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், நன்னிலம் பேரூர் செயலாளர் பக்கிரிசாமி, பேரளம் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version