கிருஷ்ணகிரி : திருமண மண்டபத்தில் 21 பவுன் தங்க நகைகள் திருட்டு – கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் 21 பவுன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுஹேல் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுமையா ஆகியோரின் திருமணம் கடந்த 16ஆம் தேதி நடந்தது. திருமண விழாவில் கலந்துகொண்ட சர்புதீனின் மனைவி கதிஜா, தங்களது 21 பவுன் தங்க நகைகளை திருமண மண்டபத்தில் உள்ள அறை ஒன்றில் பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தார். ஆனால் மறுநாள் காலை நகைகள் காணவில்லை என்பதால், கதிஜா பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை இருவர் மண்டபத்திற்குள் வந்து நகைகளை எடுத்துச் செல்கிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்த செல்போன் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

விசாரணையின் போது, கதிஜாவுடன் மண்டபத்தில் தங்கியிருந்த அவரது உறவுமுறை பெண் ஷீபா, சேலத்தைச் சேர்ந்த கிஷோரிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், ஷீபா மற்றும் கிஷோர் காதலர்கள் என்பது தெரியவந்தது. ஷீபா திட்டமிட்டே நகைகளை திருடி, தனது காதலனான கிஷோருக்கு கொடுத்து அனுப்பியதையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதன் பேரில், ஷீபா, கிஷோர், கிஷோரின் தந்தை மகேந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இந்த திருட்டில் நேரடியாக ஈடுபட்ட, கிஷோருடன் நகைகளை வாங்கச் சென்ற ஜோதி என்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version