சிவகங்கை மாவட்டத்தின் நீர்நிலைகளில் நிலவும் வளமான சூழலைத் தேடி, ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்துள்ளதை வனத்துறையினர் நடத்திய முதற்கட்டக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ஈரநிலம் மற்றும் நிலப்பறவைகள் கணக்கெடுப்புப் பணியின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி மாவட்டத்தின் மிக முக்கியமான 25 கண்மாய்களில் இக்கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதோடு, அபூர்வமான சில புதிய பறவை இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், சரணாலய பறவைகள் அதிகம் வந்து செல்லும் கொள்ளுகுடிப்பட்டி கண்மாய், வேட்டங்குடி, மாதவரயான்பட்டி, சித்த கண்மாய், அய்யாபட்டி கண்மாய் உள்ளிட்ட 25 நீர்நிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இக்கணக்கெடுப்புப் பணியில் உதவி வனப்பாதுகாவலர் மலர்கண்டன், வன அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வனப்பணியாளர்களுடன், திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையில் அம்மாள் (ஆ.பி.சீ.அ.) கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் கோபிநாத், பறவை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், திருப்புத்தூர் மற்றும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாகக் கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபட்டனர்.
பறவைகள் கூட்டை விட்டுப் புறப்படும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், அதிநவீனத் தொலைநோக்கிகள் (Binoculars) மற்றும் ‘மெர்லின்’ (Merlin) போன்ற நவீனச் செயலிகளைப் பயன்படுத்தித் துல்லியமாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரவு நேரங்களில் மட்டுமே நடமாடும் ‘நைட் ஹெரான்’, ஆந்தை போன்ற இரவுப் பறவைகளும் இந்தக் கணக்கெடுப்பில் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. வழக்கமாக இந்தப் பகுதிக்கு வரும் நத்தை கொத்தி நாரை, அரிவாள் மூக்கன், பாம்புதாரா, மஞ்சன் மூக்கன் நாரை, உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை மற்றும் கரண்டிவாயன் ஆகிய பறவை இனங்கள் அதிக அளவில் காணப்பட்டன.
இந்த ஆண்டு ஆய்வின் சிறப்பம்சமாக, ‘சைனீஸ் பான்ட் ஹெரான்’, ‘நார்த் ஸாலர்’ மற்றும் ஆர்க்டிக் துருவப் பகுதியிலிருந்து வரும் ‘ஆர்க்டிக் ஆலா’ போன்ற புதிய பறவை இனங்கள் சிவகங்கை மாவட்டக் கண்மாய்களுக்கு வருகை தந்துள்ளதை ஆய்வுக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் 89 வகையான 17 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் சிவகங்கை மாவட்டத்தில் முகாமிட்டுள்ளன. மாவட்டத்தின் நீர்நிலைகளில் போதிய உணவு மற்றும் பாதுகாப்பு இருப்பதையே இந்தப் பறவைகளின் வருகை உணர்த்துகிறது. இதனைத் தொடர்ந்து, நிலப்பறவைகளுக்கான இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு ஜனவரி கடைசி வாரத்தில் நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
