பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை தாக்கிய நிலையில், தற்போது இந்தியாவிலேயே சிலர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்திருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் உள்ளார். ஜோதி மல்ஹோத்ரா என்ற இவருடைய யூடியூப் சேனலுக்கு 3.77 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 1.33 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) மற்றும் புலனாய்வு பிரிவு (IB) அதிகாரிகள் இவரது செயல்பாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலின்படி, ஜோதி மல்ஹோத்ரா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிற்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்குப் பலமுறை பயணம் செய்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் எஷான் என்ற அதிகாரியின் மூலம் பாகிஸ்தானுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் ஷாகிர் மற்றும் ராணா ஷாபாஸ் ஆகியோரை சந்தித்ததும், பின்னர் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
ஜோதி, ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இயங்கும் ஒரு பரந்த உளவு வலையமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்ததாகவும், அந்த அமைப்பில் முகவர்கள், தகவல் தருபவர்கள் மற்றும் நிதி ஆதாரர்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “மல்ஹோத்ரா கடந்த 2018-ல் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் பாகிஸ்தான், சீனா, துபாய், தாய்லாந்து, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்குச் சென்ற பயணங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தற்போது வரை பஞ்சாபில் 8 பேர், ஹரியானாவில் 5 பேர் மற்றும் உ.பி.யில் 1 பேர் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.