தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றிக்கொடியை நிலைநாட்ட திமுக தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி இன்று ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வரவிருக்கும் தேர்தலில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன.
இந்த பிரம்மாண்டமான தொடக்க விழாவில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சித் துணை மேயர் வெற்றிச்செல்வன், குனியமுத்தூர் லோகு உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கலந்துகொண்டனர். தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துத் தொண்டர்களிடையே உற்சாக உரையாற்றிய செந்தில் பாலாஜி, “கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள்தான் வேட்பாளர் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு தொண்டனும் களப்பணியாற்ற வேண்டும். கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத போதிலும், சென்னைக்கு அடுத்தபடியாக முதல்வர் அவர்கள் அதிக முறை வருகை தந்து, எண்ணற்ற திட்டங்களை வழங்கிய மாவட்டம் கோவைதான். முதல்வருக்கு நாம் செலுத்தும் நன்றி கடனாக, 10 தொகுதிகளிலும் உதயசூரியனை வெற்றி பெறச் செய்து ஒரு சரித்திரச் சாதனையைப் படைக்க வேண்டும்” என ஆவேசமாக முழக்கமிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாக்குச்சாவடியில் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளைப் பெறுவதற்கு முனைப்பு காட்ட வேண்டும். வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக, நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் கனிவாகப் பேசி, அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்லி அவர்களின் மனமாற்றத்தைப் பெற்று நமக்கான வாக்காளர்களாக மாற்ற வேண்டும்” என வெற்றிக்கான சூத்திரத்தை வழங்கினார். திமுக நிர்வாகிகளின் இந்தப் போர்க்கால நடவடிக்கைகளும், செந்தில் பாலாஜியின் நேரடி மேற்பார்வையும் தொண்டாமுத்தூர் தொகுதி உடன்பிறப்புகளிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
