விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்கள், இன்று (15.06.2025) காலை 9.30 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவு அரங்கத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் மகன் ஏ ஜி டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் இன்று (15.06.2025) விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள ஏ. கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தமிழ்நாடு தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே முதலமைச்சர் வேட்பாளர். அவர் எவ்வாறு முடிவு எடுக்கிறாரோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். இதுதான் இறுதி பதில். இதே கேள்வி தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கேட்கப்படுகிறது” என தெரிவித்தார்.
முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக அவர் கூறியதாவது: “முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எதிர்ப்பு ஏற்படுத்த முயல்கின்றனர். முதலமைச்சர் அனைவரிடமும் சமமாக நடக்கவேண்டும். இந்த ஆட்சி ஒரு தலைப்பட்ச ஆட்சி ஆக செயல்படுகிறது. முருகர் பக்தர் மாநாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதை விளம்பரத்துக்காக நடத்தவில்லை. சீமான் உட்பட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதலமைச்சரும் கலந்து கொள்ளலாம். அறநிலைத்துறை அமைச்சர் மாநாடு சிறப்பாக நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல் பார்க்கிறார்” என்றார்.
மேலும், “விஜய்க்கும் பாஜகக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தனியாக கட்சி தொடங்கி, தனது மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். தமிழ்நாடு ஆன்மீக பூமியாக மாறிக்கொண்டுள்ளது. தேர்தலுக்கு பத்து மாதங்கள் உள்ள நிலையில், இன்னும் பல கட்சிகள் பாஜக கூட்டணியில் சேர்வார்கள். திமுகவிலிருந்தும் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளது” என நைனார் நாகேந்திரன் கூறினார்.