பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து விசாரித்த போது, கணவரின் கையெழுத்து பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பித்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்திருந்தார்.

ஆனால், தன் கணவருக்கும் தனக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு தனது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி, ரேவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்று வற்புறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணை கணவனின் உடமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கணவன் மனைவி உடனான உறவில் பிரச்சனை உள்ள நிலையில், கணவரிடம் இருந்து கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாது. திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை என தெரிவித்தார்.
மேலும், கணவனின், அனுமதி, கையெழுத்து இல்லாமல் மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பதால் கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என கூறிய நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.