மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான ஆட்டம், பாட்டத்துடன் சிறப்பான முறையில் மாநாடு தொடங்கியது. கலைநிகழ்ச்சிகளுக்கு இடையே மடாதிபதிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், பிஜேபி முன்னாள் தலைவர்
அண்ணாமலை, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண், மத்திய அமைச்சர் எல்.முருகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை மீட்க வேண்டும், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் 44 ஆயிரம் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதாகவும், அவற்றில் 300-க்கும் மேற்பட்ட கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை என்றும் கூறினார். உலகளவில் இரணடாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நமது இந்து வாழ்வியல் முறைக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் இதேபோன்ற எழுச்சி அவசியமாகிறது என்று கூறி கூடி இருந்தவர்களிடையே உணர்ச்சி பொங்க பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், முருக பக்தர்கள் மாநாட்டை உத்தரப்பிரதேசத்திலோ, குஜராத்திலோ நடத்த வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள். ஏனென்றால், இந்துக்கள் அனைத்தையும் சகித்துக் கொள்வார்கள் என்பதுதான், ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.