ஆடி மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் காலத்தில், தமிழ்நாட்டின் ஜீவநதி ஆகிய காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தண்ணீர் தொட்டபடி பாயும். பழங்காலத்திலிருந்து ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா என்ற பெயரில் காவிரி அன்னைக்கு தமிழர்கள் விழா எடுத்து மகிழ்ந்தனர். இன்று ஆடிப்பெருக்கின் போது காவிரி துலா கட்டத்தில் காவிரி அன்னையை கன்னிப் பெண்ணாக நினைத்து காதோலை கருகமணி காப்பரிசி கண்ணாடி வளையல் மஞ்சள் குங்குமம் வைத்து காவிரி மண்ணை பிடித்து வைத்து அதற்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர். மஞ்சள் நூலினை கைகள் மற்றும் கழுத்தில் பெண்கள் கட்டிக் கொண்டனர். புதுமண தம்பதியினர் தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரியமான சடங்கை காவிரி கரையில் மேற்கொண்டனர். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த ஆண்டு 18 ஆம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கு திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
